பண்ருட்டி அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: ஆடு வியாபாரி உள்பட 2 பேர் பலி


பண்ருட்டி அருகே, மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விபத்து: ஆடு வியாபாரி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 24 April 2018 10:00 PM GMT (Updated: 2018-04-25T03:08:12+05:30)

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் ஆடு வியாபாரி உள்பட 2 பேர் பலியானார்கள்.

பண்ருட்டி,

நெல்லிக்குப்பம் ஆரோக்கியசாமிதெருவை சேர்ந்தவர் குடுபாஷா மகன் முகமதுகான் (வயது 29). ஆடு வியாபாரி. நேற்று காலை இவரும் திருக்கண்டேஸ்வரம் பிரபாகரன் மகன் வினித்குமார் (18) என்பவரும் ஆடு வாங்குவதற்காக விழுப்புரம் மாவட்டம் கெடிலம் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு ஆடு வாங்கிய அவர்கள் அதை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிளை முகமதுகான் ஓட்டி வந்தார். அவர்கள் மதியம் 1 மணி அளவில் பண்ருட்டி அருகே திருவாமூர் பாலம் வளைவில் திரும்பியபோது கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த ஆடும் செத்தது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா , போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story