ரூ.35 ஆயிரம் கோடி இரும்பு தாது முறைகேடுகளில் ரெட்டி சகோதரர்களை பாதுகாக்க மோடி அரசு முயற்சி செய்வது ஏன்?


ரூ.35 ஆயிரம் கோடி இரும்பு தாது முறைகேடுகளில் ரெட்டி சகோதரர்களை பாதுகாக்க மோடி அரசு முயற்சி செய்வது ஏன்?
x
தினத்தந்தி 24 April 2018 9:45 PM GMT (Updated: 24 April 2018 9:45 PM GMT)

ரூ.35 ஆயிரம் கோடி இரும்பு தாது முறைகேடுகளில் ரெட்டி சகோதரர்களை பாதுகாக்க மோடி அரசு முயற்சி செய்வது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

பெங்களூரு, 

ரூ.35 ஆயிரம் கோடி இரும்பு தாது முறைகேடுகளில் ரெட்டி சகோதரர்களை பாதுகாக்க மோடி அரசு முயற்சி செய்வது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் குழு தலைவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.35 ஆயிரம் கோடி

கனிம சுரங்க முறைகேடுகளில் ஈடுபட்டு சிறைக்கு சென்றவர்கள் எடியூரப்பா மற்றும் ஜனார்த்தனரெட்டி. இதன் காரணமாக பா.ஜனதா ஜனார்த்தனரெட்டியை கட்சியை விட்டு நீக்கியது. ஆனால் இப்போது ஜனார்த்தனரெட்டி மீண்டும் பா.ஜனதாவில் தேர்தல் பணிகளை ஆற்றி வருகிறார். எடியூரப்பாவையும், ஜனார்த்தனரெட்டியையும் சிறை பறவைகள் என்று அழைப்பது சரியானது.

கனிம இயற்கை வளங்களை கொள்ளையடித்த ரெட்டி சகோதரர்களை பாதுகாக்க மத்திய மோடி அரசு முயற்சி செய்கிறது. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பல்வேறு துறைமுகங்கள் வழியாக ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான இரும்பு தாதுக்களை ரெட்டி சகோதரர்கள் ஏற்றுமதி செய்து மோசடி செய்தனர்.

சிறப்பு விசாரணை குழு

இரும்பு தாது முறைகேட்டில் ஈடுபட்ட எடியூரப்பாவை கர்நாடக பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளராக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். அதன் பிறகு இரும்பு தாது முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெறும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த வழக்குகளில் உரிய ஆதாரங்கள் இல்லாததால் விசாரணையை முடித்துக்கொள்வதாக கர்நாடக அரசுக்கு சி.பி.ஐ. அமைப்பு கடிதம் எழுதியது.

இரும்பு தாது முறைகேடுகளில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் நண்பர்களுக்கு 8 பேருக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கியுள்ளது. இரும்பு தாது முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அமைப்பு 6 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

விளக்கம் அளிப்பார்களா?

ரூ.35 ஆயிரம் கோடி இரும்பு தாது முறைகேட்டில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்களை மத்திய அரசு பாதுகாக்க முயற்சி செய்வது ஏன்?. இதுகுறித்து பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் விளக்கம் அளிப்பார்களா?.

இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கூறினார்.

Next Story