அத்வானிக்கு மரியாதை கொடுக்க மோடிக்கு தெரியவில்லை மல்லிகார்ஜுன கார்கே தாக்கு


அத்வானிக்கு மரியாதை கொடுக்க மோடிக்கு தெரியவில்லை மல்லிகார்ஜுன கார்கே தாக்கு
x
தினத்தந்தி 2 May 2018 11:07 PM GMT (Updated: 2 May 2018 11:07 PM GMT)

அத்வானிக்கு மரியாதை கொடுக்க மோடிக்கு தெரியவில்லை என்று மல்லிகார்ஜுன கார்கே தாக்கி பேசினார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மூத்தவர்களை பிரதமர் மோடி மதிக்கிறார். தன்னை விட வயதில் மூத்தவரான எடியூரப்பாவை கர்நாடக முதல்-மந்திரி ஆக்குவதாக மோடி கூறி இருக்கிறார். முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு மோடி மரியாதை கொடுத்துள்ளார். இது மகிழ்ச்சி தான். ஆனால் அத்வானி மற்றும் முரளிமனோகர்ஜோஷிக்கு மரியாதை கொடுக்க மோடிக்கு தெரியவில்லை.கர்நாடக மக்கள் தாங்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்ற எண்ணம் பா.ஜனதாவினருக்கு உள்ளது போல் தெரிகிறது. அவர்களின் இந்த எண்ணம் ஈடேறாது. கர்நாடக மக்கள் எக்காரணம் கொண்டும் மோடி, அமித்ஷா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைப்பாவையாக இருக்க தயாராக இல்லை.

காங்கிரஸ் கட்சியை அழிப்பதாக மோடி அடிக்கடி சொல்கிறார். அது எப்போதும் முடியாது. நாங்கள் விதைகளை போன்றவர்கள். மண்ணில் போட்டு மூடினாலும் முளைத்து மேலே எழுந்து வருவோம். எங்களை ஆழத்தில் தூக்கி போட்டாலும் மேலே வருவோம். நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் கூட காங்கிரசை அழிக்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அரசியல் சாசனத்தின் கொள்கைகள் ஒன்றுக்கு ஒன்று விரோதமாக உள்ளது. இதில் பா.ஜனதாவினர் எதை ஒப்புக்கொள்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு தான் நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே கூறுகிறார். தேர்தலுக்காக அம்பேத்கரின் பெயரை பா.ஜனதாவினர் பயன்படுத்துகிறார்கள். பா.ஜனதாவினர் எந்த கொள்கையை பின்பற்றுகிறார்கள் என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Next Story