30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த திட்டம்


30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த திட்டம்
x
தினத்தந்தி 3 May 2018 11:54 PM GMT (Updated: 3 May 2018 11:54 PM GMT)

புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுறவு சங்கத்தேர்தலை 3 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அரசுத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. 3 கட்டங்களாக இந்த தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம். வருகிற ஜூலை மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இருந்து 4 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடும் பட்சத்தில் கடைமடை பகுதியான காரைக்காலுக்கும் நீர் வரும் என நம்புகிறேன். காவிரி நீர் கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story