விவசாயிகளின் வருவாயை இருமடங்கு அதிகரிக்க 7 அம்ச திட்டங்கள் - அமைச்சர் மணிகண்டன் தகவல்


விவசாயிகளின் வருவாயை இருமடங்கு அதிகரிக்க 7 அம்ச திட்டங்கள் - அமைச்சர் மணிகண்டன் தகவல்
x
தினத்தந்தி 4 May 2018 10:30 PM GMT (Updated: 4 May 2018 8:17 PM GMT)

விவசாயிகளின் வருவாயை இருமடங்கு அதிகரிக்க 7 அம்ச திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது என்று விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான விவசாய நல்வாழ்வு பணிமனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். மின்னணு தகவல் தொழில்நுட்பவியல் இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் திட்டம் குறித்து விளக்கி கூறினார்.

கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு வேளாண்மை நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்திய அரசு அறிவித்துள்ளபடி, 2022-ல் முன்னேற்றம் அடைந்த புதிய இந்தியாவை நாம் காண வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்திய நாட்டில் உள்ள வளர்ந்து வரும் மாவட்டங்களை கண்டறிந்து அவற்றின் சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 115 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுஉள்ளன. மேலும் கிராம சுவராஜ் திட்டத்தின்படி வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகள் நல்வாழ்வு பணிமனை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த பணிமனையின் நோக்கம் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக்குவது ஆகும். இதற்காக பிரதமர் மோடி அரசால் 7 அம்ச திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

இப்பணிமனையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள், வேளாண்மை எந்திரங்கள், கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை திட்டங்கள் பற்றிய கருத்துகாட்சி அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விளக்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் மண்மாதிரி எடுத்தல் மற்றும் மண்வள அட்டை பயன்பாடு குறித்து செயல்விளக்கமும், விவசாயிகளுக்கு தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தி உள்ள உழவன் செயலி குறித்த செயல்விளக்கம் மற்றும் செயலி பதிவிறக்கம் செய்து தரப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வளத்துறையின் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் 27 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை இணை இயக்குனர் இந்திராகாந்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மோகன், கடலோர உவர் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சாத்தையா, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மைய தலைவர் விஜயலிங்கம், வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜமாணிக்கம், தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜேந்திரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல்காதர் ஜெய்லானி, நபார்டு வங்கி மேலாளர் மதியழகன் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர். 

Next Story