விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க செல்போன் செயலி அறிமுகம்


விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க செல்போன் செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 4 May 2018 10:29 PM GMT (Updated: 4 May 2018 10:29 PM GMT)

தமிழகத்தில் எடைகள், அளவைகள், பொட்டல பொருட்களில் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்க செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி முத்திரை ஆய்வாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழக தொழிலாளர் துறையால் எடைகள், அளவைகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்காக 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம், 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் (பொட்டலப் பொருட்கள்) விதிகள் ஆகியவைகள் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தின் கீழ் தராசுகள், எடைக்கற்கள், மின்னணு தராசுகள், அளவைகள் ஆகியவை கடைகள், நிறுவனங்கள், பேரங்காடிகள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங்களில் முறையாக சட்ட விதிமுறைக்கு உட்பட்டு பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தொழிலாளர் துறையில் ஆய்வு செய்வார்கள்.

தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் எடைகள், அளவைகள், பொட்டலப் பொருள்கள் விதிமீறல் குறித்து புகார் செய்தவற்கு தொழிலாளர் துறையால் TNLMCTS என்ற செல்போன் செயலி மற்றும் வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் செயலியில் சட்டமுறை எடையளவு மற்றும் பொட்டலப் பொருட்கள் குறைபாடுகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனுக்குடன் குறைகள் தீர்க்கப்படும். புகார் தெரிவித்திடும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் பெயர்கள் மறைமுகமாக வைக்கப்படும்.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நுகர்வோர் எந்த ஒரு பொருளையும் எடை போட்டு வாங்கும் முன்பு, மின்னணு தராசின் குறியீடு “0” இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொட்டலப் பொருட்களை கடையிலிருந்து வாங்கும் போது, உரிய அறிவிப்புகள் பொட்டலப் பொருட்களில் அச்சிடப்பட்டு உள்ளனவா? என சரிபார்த்து வாங்க வேண்டும்.

எடையளவுகளில் வாங்கும் பொருட்கள் மற்றும் பொட்டலப் பொருட்களில் எடை துல்லியத்தை வணிகர் வசம் உள்ள தராசில் வைத்து பரிசோதிக்க வேண்டும். பொட்டலப் பொருள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட கூடுதலாக விற்க கூடாது. எல்.பி.ஜி. வினியோகஸ்தர்கள், நுகர்வோர் சிலிண்டரின் எடையை பரிசோதிக்க தங்களது பணியாளர்களிடம் வில் தராசு கொடுத்து அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story