புதுச்சத்திரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் 7 ஆடுகள் செத்தன


புதுச்சத்திரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து 4 பேர் படுகாயம் 7 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 4 May 2018 11:40 PM GMT (Updated: 4 May 2018 11:40 PM GMT)

புதுச்சத்திரம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் வியாபாரிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் கொண்டு வரப்பட்ட 7 ஆடுகள் செத்தன.

நாமக்கல்,

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் சிலர் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 80 ஆடுகளை வாங்கி கொண்டு, ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி தேனிக்கு கொண்டு சென்றனர். இந்த வாகனம் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள தாத்தையங்கார்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென டயர் வெடித்து, சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த வியாபாரிகள் சின்னதுரை, திருப்பதி, சின்ராஜ், வீராசாமி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவற்றில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுச்சத்திரம் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த வியாபாரிகளை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன ஆடுகளையும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story