முள்ளங்கி விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டும் அவலம்


முள்ளங்கி விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டும் அவலம்
x
தினத்தந்தி 5 May 2018 10:30 PM GMT (Updated: 5 May 2018 9:11 PM GMT)

காரிமங்கலத்தில் முள்ளங்கி விலை வீழ்ச்சியால் சாலையோரம் விவசாயிகள் கொட்டி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் காரிமங்கலத்தில் உழவர் சந்தை அமைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். குறுகிய கால பயிர் என்பதால் பெரும்பான்மையான விவசாயிகள் முள்ளங்கியை பயிர் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த சில வாரங்களாகவே விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 என வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் சாகுபடி செய்த செலவை கூட விவசாயிகள் மகசூலில் எடுக்க முடியாமல் சிலர் வயலிலேயே அறுவடை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். சில விவசாயிகள் முள்ளங்கியை அறுவடை செய்து காரிமங்கலத்தில் விற்பனை செய்யும் போது போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் முள்ளங்கியை சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர்.

உழவர் சந்தை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காரிமங்கலம் பகுதியில் இருந்து மார்க்கெட்டுக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. உழவர் சந்தைகளில் ஒரு கிலோ முள்ளங்கி ரூ.8 வரை விற்பனை ஆகிறது. ஆனால் வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.3-க்கு தான் வாங்கப்படுகிறது. முள்ளங்கிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் அவற்றை சாலையோரம் கொட்டி செல்கின்றனர்.

காரிமங்கலம் ஒன்றியத்தில் உழவர் சந்தை இல்லாததால் சுமார் 20 கிலோ மீட்டர் பயணம் செய்து பாலக்கோடு உழவர் சந்தைக்கு சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி காரிமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story