காவல் பணிக்கு சென்ற பெண் கழுத்தை அறுத்து படுகொலை


காவல் பணிக்கு சென்ற பெண் கழுத்தை அறுத்து படுகொலை
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:12 PM GMT)

திருச்செங்கோடு அருகே காவல் பணிக்கு சென்ற பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை பாறை மீது மர்ம நபர்கள் வீசிச்சென்றுள்ளனர்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கல்லுப்பாளையம் காட்டுவளவு ஆண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாராயி என்ற குஞ்சாயி (வயது 65). இவரது கணவர் சண்முகம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவர்களுக்கு தங்கவேல் (47) என்ற மகனும், இந்திராணி (45) என்ற மகளும் உள்ளனர். மாராயிக்கு 3 ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிகிறது. அங்கு உள்ள ஒரு வெடிமருந்து குடோனில் மாராயி காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன், பழனியப்பன் (70) என்பவரும் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மாராயி வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்கு சென்றார். ஆனால் அவர் அங்கு போய் சேரவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை குடோனிற்கு செல்லும் வழியில் ஆடுமேய்க்க வந்த காளியம்மாள் என்பவர் அங்கு உள்ள ஒரு பாறை மீது தலையில் தாக்கப்பட்டு பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மாராயி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசாருக்கும், மாராயி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாராயி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வேலைக்கு செல்லும்போது மாராயியை மர்ம நபர்கள் வெடிமருந்து குடோன் அருகே வைத்து கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து உள்ளனர். பின்னர் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மாராயி உடலை இழுத்து வந்து ஒரு பாறை மீது வீசி இருப்பதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மாராயியுடன் மற்றொரு காவலாளியாக வேலை பார்த்து வரும் பழனியப்பனிடம் போலீசார் விசாரணை செய்தனர். மேலும் மாராயி மகன் தங்கவேலுவிற்கும், மாராயிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. எனவே தங்கவேலுவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலைக்கான காரணங்கள் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு துணை சூப்பிரண்டு சண்முகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். மேலும் மோப்ப நாய் சீமா உதவியுடன் சம்பவ இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story