நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்வு


நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலி: கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்வு
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 9:12 PM GMT)

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை நீடித்தால் ஓரிரு நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி கிருஷ்ணகிரி அணையின் முதல் பிரதான மதகில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணகிரி அணையில் இருந்த 52 அடி நீரில் 12 அடி நீர் வீணாக வெளியேற்றப்பட்டது. தற்போது அணையில் புதிய தற்காலிக ஷட்டர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 44 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 40.25 அடியாக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி சுற்று வட்டார பகுதியில் இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்யும் பட்சத்தில் கிருஷ்ணகிரி அணை அதன் முழு கொள்ளவான 44 அடி நிரம்ப வாய்ப்பு உள்ளது. தற்போது அணைக்கு வரக்கூடிய 260 கன அடி தண்ணீரும், பாதுகாப்பு கருதி அப்படியே திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணகிரி அணைக்கு மேலும் தண்ணீர் வரும் பட்சத்தில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story