லோடு ஆட்டோ - லாரி மோதல் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 4 பெண்கள் படுகாயம்


லோடு ஆட்டோ - லாரி மோதல் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 4 பெண்கள் படுகாயம்
x
தினத்தந்தி 5 May 2018 10:15 PM GMT (Updated: 5 May 2018 9:12 PM GMT)

திருச்சிற்றம்பலம் அருகே லோடு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 4 பெண்கள் படுகாயமடைந்தனர். மேலும் நிற்காமல் சென்ற லாரியை இளைஞர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புனல்வாசல் ஊராட்சி வாடிக்காடு பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு விட்டு ஒரு லோடு ஆட்டோவில், ஊர் திரும்பி கொண்டிருந்தனர். ஆவணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே லோடு ஆட்டோ சென்ற போது அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற ஒரு சிமெண்ட் நிறுவனத்தின் லாரி, லோடு ஆட்டோவின் பின் பக்கமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் பகுதி இளைஞர்கள் லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது

இந்த விபத்தில் புனல்வாசல் வாடிக்காடு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பானுமதி(வயது38), கமலம் (40), செல்வி (28), மல்லிகா (40) ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த பேராவூரணி ஒன்றிய ஆணையர்கள் சடையப்பன், குமரவடிவேல் மற்றும் ஒன்றியஅலுவலர்கள் காயமடைந்தவர்களுக்கு திருச்சிற்றம்பலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் அரியலூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story