சின்னபாண்டூரார் பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்


சின்னபாண்டூரார் பட்டியில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 9:12 PM GMT)

சின்னபாண்டூரார் பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கிழக்கு ஒன்றியம், குளத்தூர் தாலுகா சின்னபாண்டூரார் பட்டியில் சந்தனகருப்பர், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த விழாக் குழுவினர், ஊர்பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற் கான வாடிவாசல் அமைக்கும் பணி, முக்கியஸ்தர்கள் அமரும் மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்தது. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து நேற்று சின்னபாண்டூரார் பட்டியில் ஜல்லிக்கட்டு நடந்தது. முன்னதாக அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். அதேபோல மாடுபிடி வீரர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் அடக்க முன்வரவில்லை.

தொடர்ந்து திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, லால்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 480 காளைகளும் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 250 மாடுபிடி வீரர்கள் போட்டி, போட்டு அடக்க முயன்றனர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கின.

சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடியவாறு சீறிப்பாய்ந்து சென்றன. இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 11 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், கட்டில், தங்கம், வெள்ளி காசு, குளிர் சாதன பெட்டி, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை முன்னாள் அமைச்சர் சிவபதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) வெங்கடாசலம், குளத்தூர் தாசில்தார் கலைமணி, விராலிமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் திருமூர்த்தி மற்றும் சின்னபாண்டூரார் பட்டி, கீரனூர், மாத்தூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மேற்பார்வையில், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் மாரிமுத்து தலைமையில் விழாக் குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story