கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு


கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 9:13 PM GMT)

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் பொதுத்துறை சர்க்கரை ஆலை அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கிபேசினார். தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராசா சிதம்பரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்புக்கான நிலுவை தொகையான ரூ.50 கோடியை உடனடியாக அரசு வழங்க வேண்டும். ரெங்கராஜன் குழு அறிக்கையை ஏற்காமல் இதுவரை தமிழக அரசு அறிவித்து வந்த கரும்பிற்கான பரிந்துரை விலையை உடனே அறிவிக்க வேண்டும்.

முற்றுகை போராட்டம்

எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவின் விவசாய விளைபொருள் விலை நிர்ணய பரிந்துரையை அமல்படுத்தி கரும்பிற்கான கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 17-ந்தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு கரும்பு உற்பத்தி யாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ராஜேந்திரன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாணிக்கம், பாட்டாளி கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story