பெண்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் அடையும் திட்ட இயக்குனர் பேச்சு


பெண்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் அடையும் திட்ட இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 5 May 2018 10:52 PM GMT (Updated: 5 May 2018 10:52 PM GMT)

பெண்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் அடையும் என்று வேலூரில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடந்த விழாவில் கப்பல் போக்குவரத்துத்துறை திட்ட இயக்குனர் ஜெயசீலன் கூறினார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வாழ்வாதார தினவிழா வேலூர் ஊரீசு கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி மகளிர் திட்ட இயக்குனர் கோபி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய அரசின் வேலூர் மாவட்ட கண்காணிப்பு பார்வையாளர்கள் ஜெயசீலன் (கப்பல் போக்குவரத்துத்துறை தணிக்கை பிரிவு திட்ட இயக்குனர்), தீபக் சேத்தி (கால்நடைத்துறை செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு விருது வழங்கப்பட்டது. 9 திருநங்கைகளுக்கு நலவாரிய அட்டையும், மகளிர் சுயஉதவி குழுவை சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ.65 லட்சம் நிதியுதவியும், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் கப்பல் போக்குவரத்துத்துறை தணிக்கை பிரிவு திட்ட இயக்குனர் ஜெயசீலன் பேசியதாவது:-

மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து 7 வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 கண்காணிப்பு பார்வையாளர்களை நியமித்துள்ளது. அவர்கள் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என கண்காணித்தனர். அதன்படி நாங்கள் வேலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து கிராம மக்களுக்கும் கிடைக்கிறதா? என்று கண்காணித்து அதற்கான பணியில் ஈடுபட்டோம். வேலூர் மாவட்டம் வருங்காலத்தில் இந்தியாவின் முதல் மாவட்டமாக திகழும்.

ஆண்கள் நினைத்தால் ஒரு குடும்பத்தை தான் முன்னேற்ற முடியும். ஆனால் பெண்கள் நினைத்தால் ஒரு சந்ததியையே முன்னேற்ற முடியும். சங்க காலம் முதல் இதுவரை பெண்களுக்கு கல்வி அளிக்க வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். பெண்களுக்கு கல்வி முழுமையாக அளிக்க வேண்டும்.

பெண்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் அடையும். பெண்கள் கைத்தொழில் கற்று கொள்ள வேண்டும். அது பல்வேறு சமயங்களில் கண்ணீரை துடைக்கும் சக்தி கொண்டது. பெண்கள் கைத்தொழில் கற்று கொண்டால் அவர்களின் குடும்பம் மட்டுமின்றி சந்ததிகளும் முன்னேறும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தர்ராஜ், முன்னோடி வங்கிகளின் மேலாளர் தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story