மும்பை ஐகோர்ட்டில் அதிகாலை 3½ மணி வரை பணியாற்றிய நீதிபதி


மும்பை ஐகோர்ட்டில் அதிகாலை 3½ மணி வரை பணியாற்றிய நீதிபதி
x
தினத்தந்தி 5 May 2018 11:42 PM GMT (Updated: 5 May 2018 11:42 PM GMT)

மும்பை ஐகோர்ட்டில் கோடை விடுமுறைக்கு முன்பாக கடைசி நாளில் நீதிபதி ஒருவர் அதிகாலை 3½ மணி வரை பணியாற்றினார்.

மும்பை,

மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகளின் கோடை விடுமுறை நேற்று முதல் தொடங்கியது. இதனால் ஐகோர்ட்டு நீதிபதிகள் அவசரமான மற்றும் முக் கியமான வழக்குகளை நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்து நேர மேலாண்மையை திட்டமிட்டு செயல்பட்டனர்.

இதன்படி பெரும்பாலான நீதிபதிகள் மாலை 5 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்துவிட்டு கோர்ட்டு வளாகத்தில் இருந்து புறப்பட்டனர். ஆனால் நீதிபதி ஷாருக் ஜே.கதாவல்லா இரவிலும் பணியை தொடர்ந்தார். நேற்று அதிகாலை 3½ மணி வரை நீதிமன்றத்தில் பொறுமையாக இருந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். நாட்டில் லட்சக்கணக்கான வழக்குகள் கோர்ட்டுகளில் தேங்கிக் கிடக்கும் நிலையில் நீதிபதியின் இந்த செயல்பாடு பல்வேறு தரப்பினர் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நீதிபதி ஷாருக் ஜே.கதாவல்லா இதுபோல நீண்ட நேரம் பணிபுரிவது முதல் முறையல்ல. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூட அவர் நள்ளிரவு வரை வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வந்ததை மும்பை ஐகோர்ட்டு வக்கீல்கள் சுட்டிக்காட்டினர்.

அதேநேரத்தில் இரவு நெடுநேரம் வரையில் பணியாற்றினாலும் அவர் காலையில் சரியாக 10 மணிக்கு கோர்ட்டுக்கு வருகை புரிந்து வழக்கு விசாரணைகளை தொடங்கி விடுகிறார். பொதுவாக காலை 11 மணிக்குதான் கோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சுமார் 100 சிவில் மனுக்கள் அவரால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக கூறப் படுகிறது. இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டு வக்கீல் பிரவீன் சம்தானி கூறுகையில், ‘நீதிபதி ஷாருக் ஜே.கதாவல்லா அதிகாலை 3½ மணிக்கும் அப்போதுதான் பணிக்கு வந்ததுபோல் மிகவும் புத்துணர்வாக இருந்தார். கடைசி நேரத்திலும் அனைவரது வாதங்களையும் மிகவும் பொறுமையாக கேட்டறிந்து உத்தரவுகளை பிறப்பித்தார்’ என கூறினார். 

Next Story