ஊழல், முறைகேடு என 23 வழக்குகளில் தொடர்புடையவரை கர்நாடக முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்தது ஏன்?


ஊழல், முறைகேடு என 23 வழக்குகளில் தொடர்புடையவரை கர்நாடக முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்தது ஏன்?
x
தினத்தந்தி 6 May 2018 12:01 AM GMT (Updated: 6 May 2018 12:01 AM GMT)

கர்நாடகத்தில் ஊழல், முறைகேடு என்று 23 வழக்குகளில் தொடர்புடையவரை கர்நாடக முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்தது ஏன்? என்று பிரதமர் மோடிக்கு, ராகுல்காந்தி நேற்று கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரசாரத்தின்போது, அவர் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் அக்கட்சியை விமர்சித்து வருகிறார்.

இதேபோல், கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சிக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள். இதனால், கர்நாடக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

இந்த நிலையில், நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், ‘நீங்கள்(நரேந்திர மோடி) அதிகம் பேசுகிறீர்கள். பிரச்சினை என்னவென்றால், உங்களின் பேச்சுக்கு ஏற்றாற்போல் செயல்பாடுகள் இல்லை. கர்நாடகத்தில் உங்கள் கட்சி வேட்பாளர் தேர்வுக்கான முதன்மையான அம்சம் இங்கு குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவானது ‘கர்நாடகம் அதிகம் விரும்பியது‘ என்பதன் பகுதியாக இருக்கும்‘ என குறிப்பிட்ட ராகுல்காந்தி வீடியோ ‘ Answ-e-r-M-a-a-d-i-M-o-di ( பதில் சொல்லுங்கள் மோடி ) ‘ எனும் ஹெஸ்டேக்கில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். 1 நிமிடம் 20 வினாடிகள் ஓடும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:-

‘ரெட்டி சகோதரர்களின் கும்பல் 8 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது குறித்து 5 நிமிடம் பேச முடியுமா?. ஊழல், முறைகேடு என 23 வழக்குகளில் தொடர்புடையவரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்தது ஏன்?. முதன்மையான 11 தலைவர்கள் மீதான ஊழல் வழக்குகள் பற்றி எப்போது பேசுவீர்கள்?. ரெட்டி சகோதரர்களால் ரூ.35 ஆயிரம் கோடிக்கு நடந்த இரும்புதாது ஊழலை மூடி மறைக்கிறீர்கள். உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்‘ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கர்நாடக பா.ஜனதா தலைவர்களின் (ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்) படங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது கர்நாடக பா.ஜனதா தலைவர்களான எடியூரப்பா, ஸ்ரீராமுலு, சோமசேகர ரெட்டி, சுரேஷ் பாபு, கட்டா சுப்பிரமணிய நாயுடு, சி.டி.ரவி, முருகேஷ் நிரானி, கிருஷ்ணய்யா ஷெட்டி மாலூர், சிவனகவுடா நாயக், ஆர்.அசோக், ஷோபா ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. 

Next Story