சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை: தனுஷ்கோடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை: தனுஷ்கோடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 May 2018 10:15 PM GMT (Updated: 7 May 2018 8:20 PM GMT)

சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு தனுஷ்கோடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ராமேசுவரம்,

கோடை விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் ராமேசுவரத்துக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அங்கு முகுந்தராயர் சத்திரம், புயலால் அழிந்து போன தனுஷ்கோடி, அரிச்சல்முனை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு கடலின் அழகை ரசிப்பதுடன் குளிக்கின்றனர்.

இந்த பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாகும். இதனால் அங்கு யாரும் குளிக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுஉள்ளது. மேலும் இதுதொடர்பாக ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுஉள்ளன. இதனையும் மீறி சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.

சமீபத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவகோட்டை பகுதியை சேர்ந்த 3 குழந்தைகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

ஏற்கனவே இதேபோன்ற சம்பவங்களும் நடந்து உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு நேற்று அரிச்சல்முனை, தனுஷ்கோடி பகுதியில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளை கடலில் இறங்கி குளிக்க விடாமல் தடுத்தனர். 

Next Story