சேலம் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது


சேலம் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 10 May 2018 10:45 PM GMT (Updated: 10 May 2018 6:51 PM GMT)

சேலம் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று முதல் தொடங்கியது.

சேலம்,

சேலம் அரசு கலைக்கல்லூரியில் 2018-2019-ம் கல்வியாண்டிற்கு இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று முதல் தொடங்கியது. இளங்கலை பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, பொது நிர்வாகவியல், அரசியல் சார்அறிவியல், பி.எஸ்சி. கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியமைப்பியல், புவியியல், கணிப்பொறி அறிவியல், கணினி பயன்பாட்டியல், பி.காம் கூட்டுறவு, பி.காம்.வணிகவியல், பி.பி.ஏ., போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன.

இவற்றுக்கான விண்ணப்பங்களை கல்லூரி முதல்வர் சகுந்தலா, மாணவ-மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி கூட்டுறவுத்துறை பேராசிரியர் பிச்சைமுத்து, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முத்துசாமி, கண்காணிப்பாளர் முருகேசன், தேர்வு கமிட்டி உறுப்பினர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லூரி வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும். பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

அனைத்து பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,500 இடங்கள் உள்ளதாகவும், ஜூன் 6-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக கலந்தாய்வு நடைபெறும் என்றும், மாணவர்களின் தரவரிசை எண்களை ஜூன் 5-ந் தேதி கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்படும் என்று கல்லூரி முதல்வர் சகுந்தலா தெரிவித்தார். முதல் நாளான நேற்று கலை, அறிவியல் பாடப்பிரிவில் சேர விரும்பும் பிளஸ்-2 முடித்துள்ள மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்து பட்டப்படிப்பு சேர்க்கைக் கான விண்ணப்பங்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். 

Next Story