திண்டுக்கல்லில், சீருடை வழங்கக்கோரி அரசு பஸ் முன்பு அமர்ந்து டிரைவர் தர்ணா


திண்டுக்கல்லில், சீருடை வழங்கக்கோரி அரசு பஸ் முன்பு அமர்ந்து டிரைவர் தர்ணா
x
தினத்தந்தி 10 May 2018 10:45 PM GMT (Updated: 10 May 2018 9:12 PM GMT)

திண்டுக்கல்லில் சீருடை வழங்கக்கோரி அரசு பஸ் முன்பு அமர்ந்து டிரைவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை திண்டுக்கல் கிளை 3-ல் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை பணிக்கு வந்த அவர், திண்டுக்கல்-குமுளி செல்லும் பஸ்சை எடுத்தார். அப்போது, அவர் சீருடை அணியாமல் சாதாரண உடையில் பஸ்சை இயக்கினார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பணிமனை உதவி பொறியாளர் தினகரன் மற்றும் காவலாளி முருகேசன் ஆகியோர் சாதாரண உடையில் பஸ்சை எடுக்க கூடாது என்றனர். இதனால், கீழே இறங்கிய அவர் பஸ் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, அவர் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சுரேசிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு முதல் நிரந்தர பணியாளராக வேலை செய்து வருகிறேன். போக்குவரத்து பணிமனை மூலம் ஆண்டுக்கு 2 சட்டை மற்றும் 2 பேண்ட் வழங்கப்படும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக பணியாளர் களுக்கு சீருடை வழங்கப்படவில்லை. மேலும், 4 ஆண்டுகளாக சீருடை தைப்பதற்கான கூலியும் தரவில்லை. பணியாளர்களுக்கு சம்பளம், சீருடை வழங்குதல் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதாலேயே பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆனால் 2 ஆண்டுகளாக சீருடை வழங்கவில்லை. இதனால், மிகவும் பழைய, கிழிந்த சீருடைகளையே போக்குவரத்து ஊழியர்கள் அணிந்து வருகின்றனர். சீருடை கிடைக் காத காரணத்தால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன். இதேபோல கடந்த வாரம் கம்பத்திலும் ஒரு டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மண்டல மேலாளர் ஆனந்த், தர்ணாவில் ஈடுபட்ட சுரேசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உயர் அதிகாரிகளிடம் பேசி புதிய சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர் தர்ணாவை கைவிட்டு சாதாரண உடையிலேயே பணிக்கு சென்றார்.


Next Story