சிவாடியில் பெட்ரோலிய கிடங்கு அமைத்தால் போராட்டம்


சிவாடியில் பெட்ரோலிய கிடங்கு அமைத்தால் போராட்டம்
x
தினத்தந்தி 11 May 2018 5:37 AM GMT (Updated: 11 May 2018 5:37 AM GMT)

சிவாடியில் பெட்ரோலிய கிடங்கு அமைத்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தர்மபுரி மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

தர்மபுரி,

தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ.  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தின் கச்சா எண்ணெய் கிடங்கை சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு நிலங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் சிவாடி, பூதனஅள்ளி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படும். விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ள இந்த பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஏழை விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகளை பாதிக்கும் இந்த பெட்ரோலிய கிடங்கு அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவாடியில் பெட்ரோல் கிடங்கு அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தர்மபுரி தொகுதியின் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனது தலைமையில் இந்த தொகுதியின் பொதுமக்களை ஒன்று திரட்டி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதியோடு மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். 

Next Story