ராயக்கோட்டை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ராயக்கோட்டை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x

புறம்போக்கு நிலத்தில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கவுரிபுரம் கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் சுமார் 100 ஆண்டுகளாக வீடுகள் கட்டி குடியிருந்து வரும் குடியிருப்புகளை காலி செய்யக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை கண்டித்தும், இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

ராயக்கோட்டை அருகே கவுரிபுரத்தில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன், மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.ராமச்சந்திரன் பேசியதாவது:-

இந்த பகுதியில் உள்ளவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள். அவர்கள் நீண்ட காலமாக இந்த பகுதியில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அரசு அவர்களை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி இன்றைய தினம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story