மோட்டார்சைக்கிள்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி


மோட்டார்சைக்கிள்கள் மோதல்: 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 11 May 2018 10:15 PM GMT (Updated: 11 May 2018 10:03 PM GMT)

நத்தம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

நத்தம், 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை குப்பிலிபட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 29). இவர் சொந்த வேலையாக திண்டுக்கல் சென்றுவிட்டு ஊருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அதேபோல் நத்தம் சிரங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த சேர்ந்த சுரேஷ் (26) என்பவர், அதே பகுதியை சேர்ந்த முருகன் (40) என்பவருடன் நத்தத்தில் இருந்து உலுப்பக்குடிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நத்தம்-திண்டுக்கல் சாலையின் சேர்வீடு சாயஓடை பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் தூக்கி வீசப்பட்டதில் சுந்தரராஜன், சுரேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் படுகாயம் அடைந்த முருகன் உயிருக்கு போராடினார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நத்தம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் படுகாயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story