ரெட்டியார்சத்திரம் அருகே கார் மீது ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்


ரெட்டியார்சத்திரம் அருகே கார் மீது ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 May 2018 11:15 PM GMT (Updated: 11 May 2018 10:03 PM GMT)

ரெட்டியார்சத்திரம் அருகே கார் மீது ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னிவாடி,

கோவையில் இருந்து ஒரு ஆம்னி பஸ் 40 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த சுகுமார்(வயது35) ஓட்டி வந்தார்.

மதுரை அஸ்வின் நகரை சேர்ந்தவர் கோவர்த்தனன்(19). கார் டிரைவர். இவர் மதுரையில் இருந்து பழனிக்கு நேற்று காரில் வந்து கொண்டு இருந்தார். வழியில் இரவு 7 மணியளவில் ரெட்டியார்சத்திரம் அடுத்த கதிரையன்குளம் அருகே சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அதில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். இந்தநிலையில் கதிரையன்குளம் அருகே கோவையில் இருந்து வந்த ஆம்னி பஸ் மற்றொரு காருக்கு வழிவிடும்போது திடீரென நிலைதடுமாறி சாலையோரம் நிறுத்தியிருந்த கோவர்த்தனனின் கார் மீது கவிழ்ந்தது. இதனால் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த கோவர்த்தனன், ஆம்னி பஸ் டிரைவர் சுகுமார், பஸ் பயணி கன்னியாகுமரி அருகே உள்ள மேல்பாறை பகுதியை சேர்ந்த சர்ஜன்(28) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விபத்து நடந்ததை தொடர்ந்து இரவு 7 மணி முதல் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளை கவனித்தனர். காயம் அடைந்த கோவர்த்தனன், சுகுமார், சர்ஜன் ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story