நரசிங்கபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க முயன்ற 12 பேர் காயம்


நரசிங்கபுரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க முயன்ற 12 பேர் காயம்
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 7:54 PM GMT)

நரசிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 12 பேர் காயமடைந்தனர்.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே பாளையத்தேரி என்கிற நரசிங்கபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மன் கோவில் வீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

இதில் 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 450-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதில் காளைகளை அடக்க முயன்ற அருங்கால் கிராமத்தை சேர்ந்த ஆனந்தபிரசாத் (வயது 24), வீரகுமார் (20), செட்டிக்குழியை சேர்ந்த சசிக்குமார் (37), பூங்கொல்லை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (45), வடுகபாளையத்தை சேர்ந்த பவுல்ராஜ் (41), பெரியபட்டாக்காடு கிராமத்தை சேர்ந்த சுப்பையன் (55) உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த ரமேஷ், பவுல்ராஜ், சுப்பையன் ஆகிய 3 பேரும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், வீரர்களிடம் பிடி படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்கம்-வெள்ளி நாணயங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, நாற்காலிகள், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் நரசிங்கபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர். 

Next Story