தைல மரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மனு


தைல மரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மனு
x
தினத்தந்தி 12 May 2018 11:00 PM GMT (Updated: 12 May 2018 8:24 PM GMT)

தைலமரங்களை அகற்றக்கோரி குடையை பிடித்தவாறு பொதுமக்கள் ஊர்வலமாக வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஒரு வறட்சி மாவட்டம் ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக பருவமழையானது சராசரி மழையளவை விட குறைந்து கொண்டு வருகிறது. இதேபோல கடந்த ஆண்டும் பருவமழை சராசரி அளவைவிட மிகவும் குறைவாக பெய்தது. இதனால் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பல இடங்களில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது.

இதனால் வீடுகளில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டமாக மாறி வருவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள தைலமரங்கள் தான் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து “பொறந்த ஊருக்கு புகழ் சேரு” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இந்த அமைப்பின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரங்களை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். மனு கொடுக்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் இருந்து குடைகளை பிடித்துக்கொண்டு ஊர்வலமாக கலெக்டர் அலுவலக பகுதி வரை சென்றனர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியது என்பதற்கு நமது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்றவை சாட்சியாகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வறட்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது வனப்பகுதிகளில் உள்ள தைலமரங்கள் தான். இவற்றால் நமது மாவட்டத்தின் மழையளவு ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்டத்தின் வனப்பகுதிகளில் உள்ள தைலமரங்களை அகற்றி விட்டு, பலன் தரும் பழவகை மரக்கன்றுகளை நட வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி, மழைநீரை முறையாக சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். 

Next Story