விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்


விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 8:28 PM GMT)

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கரூர் காவிரி ஆற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில வர்த்தக அணி செயலாளர் விசா ம.சண்முகம் தலைமை தாங்கி, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்து வலுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி ஆலோசனை வழங்கினார். மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கரூர் மாவட்ட குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கரூர் காவிரி ஆற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தையொட்டி வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் சுங்ககேட் முதல் வட்டார போக்குவரத்து அலுவலகம் வரையிலான சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க வலியுறுத்தி வருகிற 16-ந் தேதி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் மனு கொடுப்பது மற்றும் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் உருவசிலை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுப்பது, வாங்கல் குப்புச்சிபாளையத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மண்டல விவசாய அணி செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட பொருளாளர் தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ், சந்துரு, சரவணன், பாஸ்கர் மற்றும் மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கணேஷ், கரூர் ஒன்றிய தலைவர் மாது உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story