பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 May 2018 10:15 PM GMT (Updated: 12 May 2018 8:36 PM GMT)

அரவக்குறிச்சி அருகே பெட்ரோல் பங்க் காசாளரிடம் ரூ.3½ லட்சத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரவக்குறிச்சி,

கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 68). இவர், அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் பெட்ரோல் பங்க்கில் வரவு-செலவு கணக்கு பார்த்து விட்டு ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 100-ஐ ஒரு பையில் வைத்து கொண்டு கரூரில் உள்ள பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் கொடுப்பதற்காக புறப்பட்டார். அப்போது கரூர் செல்வதற்காக மலைக்கோவிலூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக சுப்பிரமணி காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென சுப்பிரமணியின் பண பையினை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணி அவர்களை பிடிக்க முயன்ற போது, அதில் ஒருவரின் செல்போன் கீழே விழுந்தது. எனினும் அந்த 2 பேரும் பணப்பையுடன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணி புகார் கொடுத்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு அரவக் குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழிப்பறி கொள்ளையன் தவறவிட்ட செல்போனை கைப்பற்றினர். அதை வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 2 பேரையும் பிடிக்க போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர். விசாரணையின் போது, வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் அரவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story