பெண்களிடம் நூதன முறையில் நகையை பறித்த 4 பேர் கைது


பெண்களிடம் நூதன முறையில் நகையை பறித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2018 10:45 PM GMT (Updated: 12 May 2018 8:36 PM GMT)

பெண்களிடம் நூதன முறையில் நகை, பணத்தை பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணாநகரை சேர்ந்தவர் குப்பம்மாள் (வயது 80). இவர் கடந்த 7–நதேதி வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக காந்தி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் காரில் இருந்து இறங்கி பேச்சுக்கொடுத்த ஒரு டிப்டாப் ஆசாமி நகரில் திருட்டு அதிகமாக நடப்பதால் குப்பம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழற்றி பாதுகாப்பாக கொண்டு செல்லுமாறு கூறினார். அந்த நபரின் பேச்சை உண்மை என்று நம்பிய குப்பம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை கழற்றினார்.

அந்த சங்கிலியை பைக்குள் வைப்பதற்கு உதவுவதுபோல் நடித்த அந்த ஆசாமி சங்கிலியை எடுத்துக்கொண்டு வெறும்பையை மடித்து கொடுத்து வீட்டில் சென்று பார்க்குமாறு கூறினான். அதன்படி குப்பம்மாள் பார்த்தபோது பைக்குள் சங்கிலி இல்லாமல் காலியாக இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தன்னிடம் நூதன முறையில் ஏமாற்றி சங்கிலி திருடப் பட்டது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்–இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.சி. பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் காரில் இருந்து இறங்க சென்ற நபர் குப்பம்மாளுடன் பேசி நகையை திருடிய காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த காரின் பதிவெண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து சென்னையை சேர்ந்த சிலர் அந்த காரை டிரைவர் இல்லாமல் வாடகைக்கு எடுத்து ஓட்டிவந்தது தெரியவந்தது. அவர்களை அடையாளம் கண்டுகொண்ட போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி எடுத்து வந்தனர்.

இந்தநிலையில் அதே பதிவெண் கொண்ட கார் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே வந்தபோது அந்த காரை மடக்கி போலீசார் அதில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் ஆற்காடு ஆஞ்சநேயர் கோவில் வீதியை சேர்ந்த மாபூக் பாஷா (வயது 58), சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சையத் ஷாகில் (34), சர்ஜா முனுசாமி வீதியை சேர்ந்த முகமது அக்தர் (32), பிராட்வே தாயப்பன் வீதியை சேர்ந்த முனிர் அகமது பாய் (46) என்பது தெரியவந்தது.

அவர்கள் குப்பம்மாளிடம் நகையை திருடி சென்றதையும் ஒப்புக்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி பகுதிக்கு சென்று அங்கும் ஒரு வயதான பெண்மணியிடம் 9 பவுன் நகையை திருடியதாகவும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 2 தங்கசங்கிலிகளையும், அவர்கள் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த போலீசாரை வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி பாராட்டினார். கைதான 4 பேர் மீது தமிழக பகுதியில் சில வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story