நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது லாரி உரிமையாளர் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி


நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது லாரி உரிமையாளர் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 13 May 2018 11:15 PM GMT (Updated: 13 May 2018 6:42 PM GMT)

தஞ்சையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் லாரி உரிமையாளர் உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,

தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் விஜயகுமார் (வயது27). லாரி உரிமையாளர். இவருடைய மனைவி சரண்யா(24). இவர்களுடைய ஒரே மகள் தனுஸ்ரீ(3). விஜயகுமார் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சென்று வர முடிவு செய்தார். அதன்படி அவர், கடந்த 11-ந் தேதி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருச்செந்தூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். இவர்களுடன் தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த விஜயகுமாரின் மாமனார் தட்சிணாமூர்த்தி(55), மாமியார் உமாராணி(50), சரண்யாவின் அக்கா இந்துமதியின் மகள்கள் ஸ்ரீவர்ஷா(12), சாய்வர்ஷினி(10) ஆகியோரும் சென்றனர்.

காரை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த இளங்கோவன் மகன் அரவிந்த்(27) ஓட்டினார். திருச்செந்தூருக்கு சென்ற இவர்கள், கடலில் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நேற்றுமுன்தினம் இரவு திருச்செந்தூரில் இருந்து தஞ்சையை நோக்கி காரில் புறப்பட்டு வந்தனர். நேற்று அதிகாலை 3.45 மணிக்கு தஞ்சை புறவழிச்சாலையில் கிரீன்சிட்டி என்ற இடத்தின் அருகே கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது புறவழிச்சாலையோரம் ரங்கநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் ஜல்லிகள் ஏற்றப்பட்ட லாரி நின்று கொண்டிருந்தது. அந்த சமயத்தில் டிரைவர் அரவிந்த் ஓட்டி வந்த கார் திடீரென வந்த வேகத்தில் லாரியின் பின்புறம் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் டிரைவர் அரவிந்த், விஜயகுமார், தட்சிணாமூர்த்தி, தனுஸ்ரீ ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். சரண்யா, சாய்வர்ஷினி, ஸ்ரீவர்ஷா, உமாராணி ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த உமாராணி, சாய்வர்ஷினி, ஸ்ரீவர்ஷா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சாய்வர்ஷினியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story