‘எஸ்.வி.சேகரை பிடித்துக்கொடுப்பது என் வேலை அல்ல’ மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


‘எஸ்.வி.சேகரை பிடித்துக்கொடுப்பது என் வேலை அல்ல’ மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 14 May 2018 11:30 PM GMT (Updated: 14 May 2018 10:00 PM GMT)

‘விழாவுக்கு நான் சென்றபோது எதிரே வந்ததால், தற்செயலாக சந்தித்தேன், எஸ்.வி.சேகரை பிடித்துக்கொடுப்பது என் வேலை அல்ல’ என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

விழுப்புரம்,

மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரி நதிநீர் விவகாரத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் தண்ணீர் திறக்கவில்லை.

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தவுடன், காவிரி பிரச்சினையில் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும். தமிழகத்திற்கு உரிய தண்ணீரும் திறந்து விடப்படும். பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசினால் மட்டுமே காவிரி பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.

போலீசாரால் தேடப்படும் எஸ்.வி.சேகர் என்னை வந்து சந்திக்கவில்லை. ஒரு விழாவிற்கு செல்லும்போது அங்கு எதிரே வந்த அவரை தற்செயலாக சந்தித்தேன். அவரை கைது செய்ய வேண்டியது போலீஸ் வேலை. அவரை பிடித்து கொடுப்பது என் வேலையில்லை. அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும்.

நடிகர் ரஜினிகாந்த், பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று கூறியிருப்பது அவரின் சொந்த கருத்து. பா.ஜனதாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர்ந்துதான் ஆக வேண்டும் என்று ஏங்கி கிடக்கவில்லை. எங்கள் கட்சியில் பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உழைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story