சேத்தியாத்தோப்பு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை திருட்டு


சேத்தியாத்தோப்பு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை திருட்டு
x
தினத்தந்தி 14 May 2018 10:00 PM GMT (Updated: 14 May 2018 10:00 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை திருடு போனது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் காமராஜர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் வெங்கடேசன்(வயது 32). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி(28). இருவரும் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னி நத்தத்தில் உள்ள வீட்டில் வெங்கடேசனின் தந்தை பெருமாள், தாய் சகுந்தலா ஆகியோர் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று பண்ருட்டியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், அஞ்சலி செலுத்துவதற்காக கணவன், மனைவி இருவரும் பண்ருட்டிக்கு சென்றனர்.

பின்னர் மாலையில் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சகுந்தலா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ திறந்த நிலையில் கிடந்தது. மேலும் அதில் இருந்த 18 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர்கள் சேத்தியாத்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவத்தில், வீட்டு கதவு மற்றும் பீரோ கதவை மர்ம மனிதர்கள் கள்ளச்சாவியை பயன்படுத்தி திறந்து நகையை திருடி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு, வெங்கடேசனின் வீட்டில் யாரும் இல்லாததை நன்கு தெரிந்த நபரே இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். திருடு போன நகையின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story