பஸ்-வேன் மோதி விபத்து பேன்சி ஸ்டோர் உரிமையாளர் பலி; 7 பேர் படுகாயம்


பஸ்-வேன் மோதி விபத்து பேன்சி ஸ்டோர் உரிமையாளர் பலி; 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 14 May 2018 10:10 PM GMT)

ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது, பஸ்-வேன் மோதிய விபத்தில் பேன்சி ஸ்டோர் உரிமையாளர் பலியானார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இளம்பிள்ளை,

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன். பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி காஞ்சனா, மகள்கள் ஷாலினி, ரஞ்சினி, உறவினர் சதீஷ்குமார் (வயது 40), இவரது மனைவி புவனேஷ்வரி உள்பட அவர்களது உறவினர்கள் 12 பேர் ஒரு வேனில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் ஊட்டியை சுற்றிப்பார்த்து விட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வேனை சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் விஜயராகவன் என்பவர் ஓட்டி வந்தார். நள்ளிரவு நேரத்தில் அந்த வேன் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி காளிகவுண்டன்பாளையம் பிரிவு பகுதியில் வந்த போது வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.

மேலும் அந்த வேன், சாலையின் எதிர் திசைக்குள் பாய்ந்தது. அப்போது சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பஸ் மீது வேன் மோதியது. இதில் வேன், பஸ் ஆகியவற்றின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் வேனில் வந்த ஹரிகரன், ஷாலினி, விஜயகுமார், ஜெயந்தி, ஆர்த்தி, புவனேஸ் வரி, டிரைவர் விஜயராகவன் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரியானூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான சதீஷ்குமார் பேன்சி ஸ்டோர் உரிமையாளர் ஆவார். இந்த விபத்து குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story