பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 14 May 2018 10:30 PM GMT (Updated: 14 May 2018 10:10 PM GMT)

கீழையூர் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

வேளாங்கண்ணி,

கீழையூர் அருகே கொளப்பாடு கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் செல்லையன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் வேணு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கடந்த 2016-2017-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்காத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியபோக்கை கண்டித்தும், காப்பீடு தொகை வழங்காத கொளப்பாடு கூட்டுறவு கடன் சங்கத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, நாகை நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவன அலுவலர் தினேஷ், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த 2016-2017-ம் ஆண்டு கடுமையான வறட்சியின் காரணமாக சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பயிர்க்காப்பீட்டு செய்த அனைவருக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு கிராமங்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை இன்றும் வழங்கப்படவில்லை. எனவே விடுபட்ட அனைத்து கிராமங்களுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வருகிற ஜூன் மாதம் 15-ந்தேதிக்குள் விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story