குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது 1,500 கனஅடியாக குறைப்பு


குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது 1,500 கனஅடியாக குறைப்பு
x
தினத்தந்தி 14 May 2018 10:30 PM GMT (Updated: 14 May 2018 10:11 PM GMT)

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வினாடிக்கு 1,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணை விளங்குகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனிடையே இந்த மாதம் முதல் வாரத்தில் பெய்த கோடை மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதாவது கடந்த 5-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 454 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, மழையின் காரணமாக கடந்த 9-ந் தேதி வினாடிக்கு 1,970 கன அடியாக அதிகரித்தது. அதன்பின்னர் மழை குறைந்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

தண்ணீர் திறப்பது குறைப்பு

கடந்த 11-ந் தேதி வினாடிக்கு 1,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் வினாடிக்கு 808 கன அடியாக குறைந்தது. இது மேலும் குறைந்து நேற்று வினாடிக்கு 611 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. நீர்வரத்தை விட, திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து வருகிறது. கடந்த 11-ந் தேதி 35.13 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை நிலவரப்படி 34.33 அடியாக குறைந்து விட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இதன்படி வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

Next Story