கலெக்டர் அலுவலகம் முன்பு காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்த விவசாயிகள்


கலெக்டர் அலுவலகம் முன்பு காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்த விவசாயிகள்
x
தினத்தந்தி 14 May 2018 11:15 PM GMT (Updated: 14 May 2018 11:15 PM GMT)

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்தனர். இந்த நூதன போராட்டத்துக்கு பிறகு அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.

அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழு தலைவர் சு.பழனிச்சாமி, செயலாளர் திருஞான சம்பந்தம் மற்றும் விவசாயிகள் 25-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் சாக்குப்பைகளில் காய்கறி, வாழைத்தார், தராசு உள்ளிட்டவைகளை கொண்டு வந்து இருந்தனர்.

திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து காய்கறிகளை வைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து அங்கு வந்த பொதுமக்களிடம் வியாபாரம் செய்தனர். குறைந்த விலையில் காய்கறிகள் கிடைத்ததால் அதனை வாங்க பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விரைந்து வந்து கடையை அப்புறப்படுத்த கூறினர். இதனை தொடர்ந்து விவசாயிகள் காய்கறி கடையை அப்புறப்படுத்திவிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் ஒரு சில விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்ய அதிகாரிகள் மறுக்கிறார்கள். கடந்த மாதம் 21-ந் தேதி சக்திவேல் என்ற விவசாயி கொண்டு வந்த காய்கறிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் 160 கடைகளும், தரையில் வைத்து விற்பனை செய்யப்படும் 60 கடைகளும் என மொத்தம் 220 கடைகள் உள்ளன. அரசு ஆணைப்படி இங்கு தினமும் விவசாயிகளுக்கு குலுக்கல் முறையில் கடைகளை ஒதுக்கவேண்டும்.

ஆனால் கடை ஒதுக்குவதிலும், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்வதிலும் அங்குள்ள அதிகாரிகள் விவசாயிகளிடம் பாரபட்சத்துடன் நடந்துகொள்கின்றனர். எனவே இதனை அதிகாரிகள் கைவிட்டு அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில் கனிவுடன் நடந்துகொள்ளவேண்டும். மேலும் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் கடை வைக்க மறுக்கப்பட்ட விவசாயிக்கு கடை ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்த விவசாயிகள் கூறும்போது, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு கடைகள் சரியாக ஒதுக்கப்படுவதில்லை. இதனை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிக அளவு கல்வி கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்கவேண்டும் என்று கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.பி.யான பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதில் தனியார் பள்ளிகளில் அதிக அளவு கல்வி கட்டணம் வசூலிக்ப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை- எளிய குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

Next Story