முல்லுண்டு சுங்கச்சாவடியை தேசியவாத காங்கிரசார் முற்றுகையிட்டதால் பரபரப்பு


முல்லுண்டு சுங்கச்சாவடியை தேசியவாத காங்கிரசார் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 May 2018 11:16 PM GMT (Updated: 14 May 2018 11:16 PM GMT)

முல்லுண்டு சுங்கச்சாவடியை தேசியவாத காங்கிரசார் முற்றுகையிட்டதால் பரபரப்பு உண்டானது.

மும்பை,

தானே மும்ரா பைபாஸ் சாலையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்த சாலை மூடப்பட்டு உள்ளது. எனவே அந்த வழியாக நவிமும்பை, ஆமதாபாத், நாசிக், பிவண்டி செல்லும் வாகனங்கள் கிழக்கு விரைவு சாலையில் திருப்பி விடப்பட்டு உள்ளன.

நவிமும்பை செல்லும் வாகனங்கள் முல்லுண்டு - ஐரோலி சாலையில் ஆனந்த் நகர் வழியாக செல்கின்றன. எனவே அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக ஆனந்த் நகர் மற்றும் ஐரோலி சுங்கச்சாவடிகளை மும்ரா பைபாஸ் சாலை சீரமைப்பு பணி முடியும் வரை மூட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிதேந்திர அவாத் மாநில அரசை வலியுறுத்தி இருந்தார்.

இருப்பினும் சுங்கச்சாவடிகள் மூடப்படவில்லை. இதனால் முல்லுண்டு - ஐரோலி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி நேற்று திடீரென தேசியவாத காங்கிரசார் ஜிதேந்திர அவாத் எம்.எல்.ஏ. தலைமையில் முல்லுண்டு ஆனந்த் நகர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது, அவர்கள் வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கவிடாமல் வாகனங்களை போக செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

Next Story