காவிரி வரைவு திட்டம் தாக்கல்: தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


காவிரி வரைவு திட்டம் தாக்கல்: தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 15 May 2018 12:15 AM GMT (Updated: 14 May 2018 11:33 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்தது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி என்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மதுரை,

சென்னைக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு செயல் திட்டத்தை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு அதன் சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்வோம். அதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வழங்கும் என நம்புகிறோம்.

தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுக்காத வகையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் நடக்கின்ற தற்போதைய தமிழக அரசு கடைசி வரை போராடக்கூடிய வகையில் பதில் வரைவுத்திட்டங்களை சுப்ரீம் கோர்ட்டில் வழங்கி போராடி வெற்றி பெறுவோம். தமிழக மக்களின் ஜீவாதார உரிமையை காப்பாற்றும் கடமையிலும் பொறுப்பிலும் தவறாது செயல்படுவோம்.

ஒரு மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட வழக்கு என்றால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை அந்த மாநில அரசுக்கு உண்டு. காவிரி நதி நீர்பங்கீடு வழக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. அதாவது தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் இந்த வழக்கில் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

ஆகவே இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து கவலை இல்லை. எங்களது வெற்றி முயற்சிக்கு அவர்கள் ஆதரவு தந்தால், எதிர்க்கட்சி என்ற பணியை அவர்கள் செய்ய முடியாமல் போய் விடும் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள்.

திவாகரன், தினகரன் பிரச்சினை என்பது அவர்கள் குடும்ப பிரச்சினை. அந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக பதில் கூற ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story