‘தமிழகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதுதான் எங்கள் நோக்கம்’ பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


‘தமிழகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதுதான் எங்கள் நோக்கம்’ பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 15 May 2018 11:00 PM GMT (Updated: 15 May 2018 9:30 PM GMT)

தமிழகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதுதான் எங்கள் நோக்கம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சி,

காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழு வேடிக்கை பார்க்கும் குழுவாக இருக்கக் கூடாது. செயல்படுத்தும் குழுவாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. மத்திய அரசும் இதைத்தான் செயல்படுத்துகிறது. அதாவது, அலங்கார வார்த்தைகளால் இல்லாமல், அவசியமானதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இக்குழுவில் 4 மாநில பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். அதற்கு இணையாக மத்திய அரசின் பிரதிநிதிகளும் உள்ளனர். இருப்பினும் இக்குழு எடுக்கும் முடிவை ஒருவேளை, கர்நாடகா ஒப்புக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?. எனவே, நிர்வாகத்தில் மத்திய அரசுக்கும் இதில் அதிகாரம் வேண்டும்.

தமிழகத்திற்கு விடவேண்டிய 177 டி.எம்.சி. தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை மத்திய அரசு கண்டும் காணாமல் இருந்தால் ஏற்க முடியாது. காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா? என்றால், அதற்கு வாரியம் என்றும், ஆணையம் என்றும், குழு என்றும் பெயர் வைத்துள்ளார்கள். இதில் எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

காவிரி பிரச்சினை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தன்னை அரவணைக்கும் கட்சிகளை தேடிச்சென்று அழைப்பு விடுத்து வருகிறார். காவிரி பிரச்சினை தொடர்பாக யார் கூட்டம் நடத்தினாலும், அதில் பேசப்படும் விஷயம் ரொம்ப முக்கியம். கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை பார்த்து, பாரதீய ஜனதா பங்கேற்பது குறித்து அழைப்பு விடுத்தால் முடிவு செய்யப்படும்.

திருச்சி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ‘ரிங்’ ரோடு திட்டங்களையும் நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிலர் அச் சாலைத்திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

தமிழக பாரதீய ஜனதாவில் பலர் கருத்து கூறுவதால், அதை பிரச்சினை என்று சொல்லமுடியாது. பிரச்சினை இல்லாத கட்சி எதுவும் உள்ளதா?. காங்கிரசில் கூட 4 செயல்தலைவர்களை நியமிக்க போவதாக கூறுகிறார்கள். திருச்சியில் என்னை, “நாளைய முதல்வரே”என வரவேற்று பேனர்கள் வைத்துள்ளதால், நான் நாளைய முதல்வர் என்று அர்த்தமில்லை. தமிழகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதுதான் எங்கள் நோக்கம். முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும். கர்நாடகா தேர்தல் முடிவால், தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் கொண்டுவரப்படுமா? என்பதை சொல்ல முடியாது. கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க வழிபிறக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story