அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது


அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 May 2018 10:15 PM GMT (Updated: 15 May 2018 9:33 PM GMT)

நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நீடாமங்கலம் கோரையாற்றில் ஒரு டிராக்டரில் 2 பேர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதை பார்த்து போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை கண்டு அவர்கள் 2 பேரும் தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடி விட்டார்.

பிடிப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில் அவர், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 22) என்பதும், தப்பியோடியவர் அதை பகுதியை சேர்ந்த புகழேந்திரன் என்பதும், இவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய புகழேந்திரனை வலைவீசி தேடிவருகின்றனர். 

Next Story