திருப்பூரில் நடுரோட்டில் கிடந்தது எந்திரத்தில் சிக்கி சேதமான தொழிலாளியின் கால்


திருப்பூரில் நடுரோட்டில் கிடந்தது எந்திரத்தில் சிக்கி சேதமான தொழிலாளியின் கால்
x
தினத்தந்தி 15 May 2018 11:03 PM GMT (Updated: 15 May 2018 11:03 PM GMT)

நடுரோட்டில் கிடந்தது எந்திரத்தில் சிக்கி சேதமான தொழிலாளியின் கால் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

திருப்பூர்,

திருப்பூரில் நடுரோட்டில் கிடந்தது எந்திரத்தில் சிக்கி சேதமான தொழிலாளியின் கால் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மின்மயானம் அருகே நடுரோட்டில் நேற்று முன்தினம் மாலை மனிதனின் இடது கால் ஒன்று கிடந்தது. முழங்காலுக்கு கீழ் துண்டான காலை, நாய்கள் இழுத்துச்சென்றதை பார்த்து அந்த பகுதியில் உள்ளவர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள்.

கால் அழுகிய நிலையில் ஒருபகுதி எரிக்கப்பட்டு காணப்பட்டது. மேலும் மருத்துவமனையில் பயன்படுத்தும் துணிகள் அந்த காலில் சுற்றப்பட்டு இருந்தது. மருத்துவ உபகரணங்களும் அதனுடன் இருந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நோயாளியிடம் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கால் என்பதை முதல்கட்ட விசாரணையில் போலீசார் கண்டறிந்தனர். அந்த காலை கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தொட்டிப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கால் யாருடையது?, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். மேலும் மருத்துவமனையின் உபகரணங்கள் இருந்ததால் திருப்பூர் மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இதுபோல் யாருக்காவது முழங்காலுக்கு கீழ் கால் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டதா? என்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், திருப்பூர் தீபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருப்பூர் அம்மாபாளையம் பாரதிநகரை சேர்ந்த சக்தி(வயது 33) என்பவருடைய கால் என்பது உறுதி செய்யப்பட்டது. சக்தியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆகும். இவர் திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பித்தளை தகடு தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

கடந்த 11-ந் தேதி வேலை செய்தபோது அவர் அணிந்திருந்த வேட்டி, எந்திரத்தில் சிக்கியதில் எதிர்பாராதவிதமாக அவருடைய இடது கால் எந்திரத்துக்குள் சிக்கி நசுங்கியது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் தீபா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகவும் சேதமான சக்தியின் இடது காலின் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை டாக்டர்கள் வெட்டி எடுத்து விட்டனர். பின்னர் சக்தியின் துண்டிக்கப்பட்ட காலை முறைப்படி எரிப்பதற்கு எடுத்துச்செல்வதாக அவருடைய சகோதரர் ராஜா, மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். முறையாக எழுதி வாங்கி மருத்துவமனை நிர்வாகம் அந்த காலை ராஜாவிடம் ஒப்படைத்துள்ளது.

கடந்த 12-ந் தேதி இரவு ராஜா அந்த காலை எடுத்து வந்து மின்மயானம் அருகில் உள்ள மயானத்தில் வைத்து மண்எண்ணெய் ஊற்றி எரித்து விட்டு சென்றுள்ளார். ஆனால் மழை வந்ததால் கால் முற்றிலும் எரியவில்லை. அந்த காலை நாய்கள் இழுத்து வந்து நடுரோட்டில் போட்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக சக்தி மற்றும் ராஜாவிடம் திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story