ஈரோட்டில் அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்


ஈரோட்டில் அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 16 May 2018 12:08 AM GMT (Updated: 16 May 2018 12:08 AM GMT)

ஈரோட்டில் அனுமதியற்ற வீட்டு மனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் குவிந்தனர்.

ஈரோடு,

அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமையும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்திற்கான கால அவகாசம் வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி இணையதளம் மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக அந்தந்த கிராமப்புறங்களில் வட்டார வளர்ச்சி அதிகாரி, பேரூராட்சி செயல் அதிகாரி, மாநகராட்சி அல்லது நகராட்சி ஆணையாளர்கள் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு நகர் ஊரமைப்பு துறை மற்றும் ஈரோடு மாநகராட்சி சார்பில் அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான சிறப்பு முகாம் ஈரோடு பூந்துறைரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமில் நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் ஆர்.வாழவந்தான், மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். ஈரோடு மாநகராட்சி 3-வது, 4-வது மண்டலத்திற்கு உள்பட்ட பகுதிகளிலும், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளிலும் உள்ள மனைகளை வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. இதில் தங்களது மனைகளை வரன்முறைப்படுத்த ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது.

ஆன்-லைன் பதிவுக்கு தனி இடமும், அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்க தனி இடமும் ஒதுக்கப்பட்டது. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்க்கும் பகுதியின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் முந்திக்கொண்டு சென்றதால் கூட்டநெரிசல் அதிகமானது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு தாலுகா போலீசார் பொதுமக்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். முகாமில் நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் மூக்கையன், மாநகராட்சி உள்ளூர் திட்டக்குழும செயலாளர் விஜயன், மாநகராட்சி உதவி ஆணையாளர் அசோக்குமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ஈரோடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்க தலைவர் சதாசிவம் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சி 3-வது, 4-வது மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளுக்கும், மொடக்குறிச்சி பகுதிக்குமான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரியும், பேரூராட்சி செயல் அதிகாரியும் முகாமில் கலந்துகொள்ளவில்லை. இதனால் மொடக்குறிச்சி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பயன்பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story