இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


இளம்பெண்ணை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 16 May 2018 12:18 AM GMT (Updated: 16 May 2018 12:18 AM GMT)

சோழவரம் பகுதியில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் சோலையம்மன் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 52). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கற்பகம் (48). இவர்களுக்கு லதா (19) என்பவர் உள்பட 3 மகள்கள். புதுச்சேரி தன்வந்திரி நகரை சேர்ந்தவர் எழிலரசன் (26). கூலித்தொழிலாளியான இவர், ஆறுமுகத்தின் உறவினர் ஆவார். அடிக்கடி ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்து செல்லும் எழிலரசன், லதாவை ஒரு தலையாக காதலித்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 7.4.2011 அன்று, ஆறுமுகம், அவரது மனைவி கற்பகம் ஆகியோர் தங்களது 2-வது மகளுக்கு உடல்நலம் சரியில்லை என ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது வீட்டில் லதாவும், அவரது மற்றொரு தங்கையும் இருந்தனர்.

அந்த சமயத்தில் அங்கு வந்த எழிலரசன், லதாவிடம், நான் உன்னை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த எழிலரசன், லதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி பரணிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை, ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டாதல் எழிலரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறினார். இதைத்தொடர்ந்து சோழவரம் போலீசார் எழிலரசனை புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story