ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்


ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்கக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2018 11:00 PM GMT (Updated: 16 May 2018 7:44 PM GMT)

ஆழ்குழாய் கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்ககோரி கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள செங்கமேடு, முள்ளங்குறிச்சி, குளந்திரான்பட்டு ஆகிய ஊராட்சிகளில் கடந்த 2004-2005-ம் ஆண்டில் மாவட்ட கலெக்டரின் நேரடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் சமுதாய ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டன. இதில் குளத்திரான்பட்டி ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு பள்ளத்தான்மனை ஆதிதிராவிடர் தெருவில் அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் செங்கமேடு, முள்ளங்குறிச்சி ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு அதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளத்தான்மனையில் ஆழ்குழாய் கிணறு, மின் மோட்டர் அறை, குழாய் இணைப்பு போன்றவை அமைக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சுயஉதவிக்குழு பெண்கள், விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளத்தான்மனை ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் இணைப்பு கிடைக்கும் வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலேயே தங்க போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் தலைமையிலான அதிகாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story