டேங்க் ஆபரேட்டருக்கு சம்பளம் வழங்காததால் ஒன்றியக்குழு அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு


டேங்க் ஆபரேட்டருக்கு சம்பளம் வழங்காததால் ஒன்றியக்குழு அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 May 2018 11:00 PM GMT (Updated: 17 May 2018 9:48 PM GMT)

வல்லம் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டருக்கு முறையான சம்பளம் வழங்காததால், கணியம்பாடி ஒன்றியக்குழு அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வேலூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 52). இவர் அதே பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். அப்போது இவருக்கு மாத சம்பளமாக அரசு அறிவித்த ரூ.1,390-ஐ வழங்காமல், ரூ.300 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்போது பணியில் இருந்த ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பகாந்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் அரசு அறிவித்த கூலியை வழங்கக்கோரி பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ஜெயபால் கடந்த 2010-ம் ஆண்டு, வேலூர் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதி அரசு அறிவித்தப்படி, ஜெயபாலுக்கு சம்பள பாக்கித்தொகை ரூ.81 ஆயிரத்து 365-ஐ வழங்க உத்தரவிட்டார். ஆனால் சம்பளத் தொகையை அரசு வழங்கவில்லை. இதையடுத்து ஜெயபால் மீண்டும் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

ஜெயபால் தொடர்ந்த, வழக்கை விசாரித்து வந்த தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி, கடந்த 2-ந் தேதி கணியம்பாடி ஒன்றியக்குழு அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், டேபிள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி பொருட்களை ஜப்தி செய்ய, வேலூர் தொழிலாளர் நீதிமன்ற அமீனா ஜெயந்தி, வக்கீல் தாஸ் மற்றும் ஜெயபால் ஆகியோர் நேற்று காலை 10 மணி அளவில், கணியம்பாடி ஒன்றியக்குழு அலுவலகத்திற்கு சென்றனர். மேலும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு ஏற்றவாறு வாகனத்தையும் தயாராக கொண்டு வந்திருந்தனர்.

ஜப்தி செய்ய வருவதை முன்கூட்டியே தெரிந்துக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலக கதவை பூட்டிவிட்டு சென்று விட்டனர். நேற்று மாலை 5 மணி ஆகியும் ஒன்றியக்குழு அலுவலகம் திறக்கப்படவில்லை. நீண்ட நேரமாக அலுவலக வாசலில் காத்திருந்த கோர்ட்டு ஊழியர்கள் பொருட்களை ஜப்தி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக அலுவலகத்தின் முன்பு காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வந்த பொதுமக்கள், அலுவலக கதவுகள் பூட்டியிருப்பதை கண்டு அதிருப்தி அடைந்தனர்.

பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் கணியம்பாடி ஒன்றியக்குழு அலுவலகம் நேற்று ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story