முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் அடையாளம் தெரிந்தது


முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 17 May 2018 11:30 PM GMT (Updated: 17 May 2018 11:03 PM GMT)

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பற்றிய அடையாளம் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி

புதுவை திலாசுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி வீடு உள்ளது. இந்த தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்தநிலையில் சென்னை எழும்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதுகுறித்து புதுவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் ரங்கசாமியின் வீட்டுக்கு சென்று ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே இது மிரட்டல் என்று போலீசார் முடிவு செய்தனர்.

இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என்பது குறித்து விசாரித்ததில் மரக்காணம் பகுதியை மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் என்பதும், தற்போது அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. ஏற்கனவே புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் இதே நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story