பிளஸ்-2 முடித்த பின்னர் பெண்கள் படிப்பினை தொடர பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


பிளஸ்-2 முடித்த பின்னர் பெண்கள் படிப்பினை தொடர பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 17 May 2018 11:30 PM GMT (Updated: 17 May 2018 11:16 PM GMT)

பிளஸ்-2 படித்த பின்னர் பெண்கள் படிப்பினை தொடர பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி

தண்ணீர் சேகரிப்பு தொடர்பாக 2-வது கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசு செயலாளர்கள் அன்பரசு, தேவநீதிதாஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் படுகை அணை திட்டங்கள், வாய்க்கால்களை தூர்வாருதல், குளங்களை சீரமைப்பு செய்தல், கட்டிடங்களில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசுடன் இணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுதவிர தொழிற்சாலைகளில் நிலத்தடி நீரின் பயன்பாடு, மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரின் பயன்பாடு ஆகியன குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஊசுட்டேரி நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாருவது குறித்தும் பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிறைத்துறை சீர்திருத்தம் தொடர்பாக ஆரோவில் குழுவினை சேர்ந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பை கோருவது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி அந்த குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும் கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட கருத்து பதிவில் கூறியிருப்பதாவது:-

பெற்றோரின் பழமைவாத நம்பிக்கையால் மாணவிகள் பலர் மேல்படிப்பினை படிக்கும் வாய்ப்பினை இழந்துள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் அவர்களிடம் பேசும்போது, தொடர்ந்து படிக்க விரும்புவதாகவும், பெற்றோர்களிடம் திருமணம் செய்து வைக்கவேண்டாம் என்று கூறுமாறும் தெரிவித்துள்ளார்.

பெண்களை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கான சீர்திருத்தம் தேவை எனவும், அதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசு பள்ளிகளில் மதிய உணவுடன் இலவச கல்வி அளிக்கப்படவில்லை என்றால் படிப்பினை பாதியில் நிறுத்தியிருப்பார்கள் என்றும், தந்தை குடிக்கு அடிமையாகி இருந்தால் தனியார் பள்ளிகளில் படிக்கம் பெண் பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்துவதில்லை என்று கவர்னர் மாளிகைக்கு புகார்கள் வருவதாகவும் தெரிவித்துள்ளார். பிளஸ்-2க்கு பின்னர் பெண்கள் படிப்பினை தொடர பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Next Story