சூளகிரி அருகே பலுவனபள்ளி ஏரியில் தூர் வாரும் பணி: கலெக்டர் தொடக்கம்


சூளகிரி அருகே பலுவனபள்ளி ஏரியில் தூர் வாரும் பணி: கலெக்டர் தொடக்கம்
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 8:37 PM GMT)

சூளகிரி அருகே பலுவனபள்ளி ஏரியில் தூர் வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அத்திமுகத்தில் இயங்கி வரும் அதியமான் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில், பலுவனபள்ளி ஏரியில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை கலெக்டர் கதிரவன் தொடங்கி வைத்து பணிகளை பார்வையிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

சூளகிரி அருகே அத்திமுகம் பலுவனபள்ளியில் 7.87 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் தூர் வாரும் பணியை, அதியமான் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மேற்கொண்டு, பணியை தொடங்கியுள்ளது. இந்த பணியின்போது, கரையை அகலப்படுத்தி, பலப்படுத்துவதுடன் நீர்வரத்து வழிகளை கண்டறிந்து ஏரிக்கு நீர் வரும் வகையில் கால்வாய்களும் தூர் வாரப்பட வேண்டும். இந்த தூர் வாரும் பணிகளுக்கு, நரசிப்புரம், பலுவனபள்ளி, செட்டிப்பள்ளி, ஆலுசாகனபள்ளி, அத்திமுகம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவிசாயிகள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மேலும், இப்பகுதி விவசாயிகள் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை, தங்கள் விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பணிகளுக்கு முன்னதாக, வருவாய் துறை சார்பில் ஏரியை சுற்றி நில அளவை செய்து கொடுக்க வேண்டும். இந்த ஏரி தூர்வாரப்படும் பட்சத்தில், 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு பெரிதும் உதவி புரிவதுடன், மழைநீரை பல மடங்கு சேமித்து வைக்கவும் உதவும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில், கல்லூரியின் மேலாளர் காளமேகம், அதியமான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சுரேஷ்பாபு, கல்லூரி முதல்வர் விஜயராகவன், ஸ்ரீகண்டன், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரபாஸ்கர், ஆப்தா பேகம், தாசில்தார் மிருணாளினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story