நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளுபடி


நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் கருப்பசாமி ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 18 May 2018 11:30 PM GMT (Updated: 18 May 2018 11:30 PM GMT)

மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியர் கருப்பசாமியின் ஜாமீன் மனுவை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையின் அடிப்படையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது மூவரும் மதுரை மத்திய சிறையில் உள்ளார்கள்.

முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனு நீதிபதி (பொறுப்பு) சிங்கராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டு அரசு வக்கீல் ராமகிருஷ்ணன் ஆஜராகி வாதாடி இவர்களை ஜாமீனில் விடுவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிங்கராஜ், பேராசிரியர் கருப்பசாமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். பேராசிரியர் முருகன் மனு மீதான விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story