துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு


துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 19 May 2018 12:34 AM GMT (Updated: 19 May 2018 12:34 AM GMT)

வத்தலக்குண்டுவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டுக்குள் நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் புகுந்து அவருடைய மனைவியிடம் 10 பவுன் நகையை பறித்து சென்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

வத்தலக்குண்டு,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு எழில் நகரை சேர்ந்தவர் சக்திவடிவேல் முருகன். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார். இவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர்களுடைய மகன் கோகுல். மகள் வர்ஷா. சக்திவடிவேல் முருகன் பயிற்சிக்காக வெளியூர் சென்றுவிட்டார். வீட்டில் ரேணுகாதேவியும் அவருடைய மகன், மகளும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் 3 பேரும் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு வேளையில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவருடைய வீட்டுக்கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் படுக்கை அறையில் உள்ள ஒரு மேஜை பெட்டகத்தில் இருந்த நகையை திருடினர். அப்போது ஏற்பட்ட சத்தத்தால் தூக்கத்தில் இருந்து எழுந்த ரேணுகாதேவி அவர்களை பார்த்து திருடன்...! திருடன்...! என கூச்சல் போட்டார். அப்போது 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி அவர் சத்தம் போடாமல் பார்த்துக்கொண்டனர். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

அடுத்த நாள் வத்தலக்குண்டு போலீசில் இதுகுறித்து ரேணுகாதேவி புகார் அளித்தார். அதில், நள்ளிரவு வேளையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர், படுக்கை அறை மேஜை பெட்டகத்தில் இருந்த 2 பவுன் நகையை திருடியதுடன் தான் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியையும் பறித்துச்சென்றுவிட்டனர் என தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருடைய வீட்டுக்கு போலீசார் சென்று பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர்.

பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story