கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில் 2-ம் போக நெல் அறுவடை பணிகள் தொடக்கம்


கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில் 2-ம் போக நெல் அறுவடை பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 19 May 2018 10:45 PM GMT (Updated: 19 May 2018 9:48 PM GMT)

கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில் 2-ம் போக நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது.

உப்புக்கோட்டை,

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 2-ம் போக குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக முல்லைப் பெரியாற்றில் போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் கம்பம் பள்ளத்தாக்கின் தொடக்க பகுதிகளில் மட்டுமே 2-ம் போக நெல்சாகுபடி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலான மழை பெய்தது. இதுதவிர கோடை மழையும் பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இதனால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் வரத்து போதிய அளவு இருந்தது. இதனைத்தொடர்ந்து கம்பம் பள்ளத்தாக்கு கடைமடை பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு 2-ம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டது. கடைமடை பகுதிகளான உப்புக்கோட்டை, உப்பார்பட்டி, வீரபாண்டி, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளது.

தற்போது கடைமடை பகுதியான வீரபாண்டி, சடையால்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக நெல் அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு 2-ம் போக நெல் சாகுபடி அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story